ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு; ரயில் மறியல் செய்த ஆதித்தமிழர் கட்சியினர்
மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது.
பிரதமர் மோடி அண்மையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டம் குலத்தொழில் முறையை ஊக்குவிப்பதாக கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் என்று இன்று தேனி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தேனி பெரியகுளம் சாலையில் ஊர்வலமாக வந்த ஆதித்தமிழர் கட்சியினர் மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் நோக்கி தேனி வழியாக சென்ற பயணியர் ரயிலை மறிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தினர்.
பின் ரயில்வே கேட் அருகே நின்று மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட ஆதித்தமிழர் கட்சியினரை தேனி நகர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.