ஊரையே காலி செய்து திருப்பதிக்கு போகும் ஒரு கிராமம்… காரணம் இதுதான்…!

tirupathi

கிருஷ்ணகிரி அருகே ஊரை காலி செய்து ஒட்டுமொத்த கிராமமும் திருப்பதிக்கு பயணம் மேற்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.  1,000க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ளது செட்டிமாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒட்டுமொத்த ஊரும் காலி செய்து கொண்டு குடும்பம் குடும்பமாக திருப்பதிக்கு சென்று வருவது வழக்கம். இது அறிவிக்கப்படாத ஊர் கட்டுப்பாடாக இன்று வரை தொடர்கிறது.

இந்நிலையில், கிராம மக்கள் சுமார் 15 பேருந்துகளில் ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து கொண்டு திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக, ஊர் தலைவர் மாரியப்பன் தலைமையில், கிராமங்களை சுற்றிலும் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இந்த ஆன்மீகப் பயணத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் துணி கட்டிய உண்டியல் வைத்து, அதில் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து திருப்பதிக்கு காணிக்கை சேமித்து வருகின்றனர். 

அந்த சேமிப்பு மற்றும் காணிக்கை பணத்தை எடுத்துக்கொண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய புறப்பட்டு செல்கின்றனர். வீட்டிற்கு ஒருவர் மட்டும் கிராமத்தில் தங்கி இருந்து கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். மேலும் ஊரில் உள்ள அனைவரும் திருப்பதிக்கு சென்று விட்டதால் பாதுகாப்பு கோரி காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் கொடுத்துவிட்டு சென்றனர். மேலும் ஊரில் உள்ளவர்களும்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *