அரிசி, கோதுமை வரியை உடனடியாக நீக்க வேண்டும் வணிகர் சங்க தலைவர் எச்சரிக்கை
ஜிஎஸ்டி வரியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மாநில செஸ் வரியை நீக்க வேண்டும் என சேலத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளார்…..
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அத்தியாவசியமான பொருட்களான அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு புதிதாக விதிக்கப்பட்ட ஐந்து சதவிகித ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்ரமராஜா கூறும்போது, மீண்டும் இரண்டாவது முறையாக திமுக- வின் தலைவராக ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜிஎஸ்டி வரியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மாநிலத்துக்கான செஸ் வரியை நீக்க வேண்டும். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் பிரச்சனையால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றார்.
சேலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பாதாளசாக்கடை திட்டம் நடக்கிறது. இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைகின்றனர். அரசு துரித நடவடிக்கை எடுத்து விரைந்து முடிக்க வேண்டும். வருகிற 11 ஆம் தேதி எங்களது ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஜிஎஸ்டி பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விவாதித்து போராட்டம் நடத்துவது குறித்து கலந்தாலோசித்து தேதி அறிவிப்போம்.
பான்பராக், குட்கா, வைத்துள்ளனரா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். ஏற்கனவே வியாபாரம் செய்தவராகளை காவல் துறையினர் அழைத்து சென்று துன்புறுத்துகின்றனர். அதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவர், சொத்து வரி, மின்கட்டன உயர்வு, பரிசீலனை செய்து பதிவு பெற்ற வியாபாரிகளுக்கு சலுகை அடிப்படையில் மின்சாரம் தர வேண்டும் என்றார்.