1 மரம் நட்டால் 5 யூனிட் மின்சாரம் இலவசம்
ஜார்கண்ட் மாநிலத்தின் 75-வது வன திருவிழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். வீட்டிலோ, அலுவலகத்திலோ 1 மரம் நட்டால் 5 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழலில் அதிகமான மரங்கள் அழிக்கப்படுவதால் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது “நகர்ப்புறங்களை கான்கிரீட்மயம் ஆக்குவதை மனதில் வைத்து, ஒவ்வொரு மரத்தை நடுவதற்கும், பாதுகாப்பதற்கும் 5 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கும். ஆனால், இது செடி வளர்ப்புக்கு பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மரங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. அதனால் இந்த ஆண்டு முடிவுக்குள் 2.8 கோடி மரங்களை நட அரசு முடிவு செய்துள்ளது. அதனை முன்னெடுக்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களையும் பின்பற்றினால் நம் நாடே பசுமையாக இருக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.