எங்கும் தமிழ், எதிலும் தமிழ்..!! மெக்காவில் ஒலிக்கப்போகும் அரஃபா தமிழ் உரை..!!
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இனி தமிழிலும் அரஃபா உரை வாசிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மெக்காவின் தலைவர் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ் கூறும்போது, ‘மதினா, மெக்காவின் வளர்ச்சிக்கு, சேவைக்கும் சவுதி அரசு அனைத்து ஆதரவையும் வழங்கி வருகிறது.
அரஃபா உரை மொழிபெயர்ப்பு இந்த வருடம் ஐந்தாவது வருடத்தில் நுழைந்துள்ள நிலையில், இத்திட்டம் 14 மொழிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பெர்சியன், சீன மொழி, துருக்கி, ஸ்பெனிஷ் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதில் தமிழ், வங்காளம் போன்ற மொழிகளில் இணைந்துள்ளன.
அரஃபா உரை மொழிபெயர்ப்பு என்பது உலகிற்கு ஒரு பரந்த திட்டமாகும், குறிப்பாக புனித தலங்களுக்கு வருபவர்கள், அரபு அல்லாத மொழி பேசுபவர்கள் தங்கள் தாய்மொழியில் கேட்க உதவுகிறது.
யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவை செய்ய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இஸ்லாத்தில் நிதானம் மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய செய்தியை உலகுக்கு தெரிவிக்க தலைமை ஆர்வமாக உள்ளது.