பெண் ஊழியர்களுக்கு ஊதிய பாகுபாடு..!! இழப்பீடு தர முன்வந்த கூகுள் நிறுவனம்..!!
உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு ஊதிய பாகுபாடு காட்டப்படுகிறது என எழுந்த குற்ற சாட்டுக்கு கூகுள் நிறுவனம் தற்போது இழப்பட்டு வழங்கியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலிஃபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 15 ஆயிரத்து 500 பெண் ஊழியர்களுக்கு, ஒரே விதமான பதவிகளில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதாகவும், அவர்களுக்கு தகுதி குறைவான பணிகளே வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக 2017ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர்கள் மூன்று பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கூகுள் நிறுவனம், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களுக்கு 118 மில்லியன் டாலர் இழப்பீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பாலின பாகுபாட்டிற்காக கூகுள் நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் மீது பாகுபாடு காட்டியதாக 38 லட்சம் டாலர்கள் அபராத தொகையை கூகுள் நிறுவனம் அமெரிக்க தொழிலாளர் துறைக்கு செலுத்த ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.