பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு
சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியை, சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்
சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில், சதீஷ்குமார் என்பவரின் பட்டாசு குடோன் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிதி உதவியும் , காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமார், பானுமதி மற்றும் நடேசன் ஆகிய மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் ஆகியோர் இன்று நேரில் வழங்கினர்.
இதேபோன்று காயம் அடைந்த ஆறு பேரின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினர். சேலம் அரசு பொது மருத்துவமனை முதல்வர் மணி மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர்.தனபால் ஆகியோர் உடன் இருந்தனர்.