நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துனர்: மூளை வளர்ச்சியற்ற மகனுடன் ஆட்சியர் அலுவலகம் சென்ற தந்தை..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூளை வளர்ச்சியற்ற மகனுடன் சென்ற தந்தையை பேருந்து நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்டசம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்றிருக்கிறது.
ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த தக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் அவரின் மூளை வளர்ச்சியற்ற 16 வயது மகன் ஹரி பிரசாத்துடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கிருஷ்ணகிரிக்கு பேருந்தில் வந்துள்ளார்.
அப்போது அவரை நடத்துனர் பேருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லாது கீழே இறங்குங்கள் எனக்கூறி நடுவழியில் இறக்கி விட்டுள்ளார். இதையடுத்து மூளை வளர்ச்சியற்ற தன் 16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்கியபடி ஒன்றரை கி.மீ தூரம் தூக்கி வந்து கோபாலகிருஷ்ணன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கூறுகையில் எனது மகனுக்கு பிறப்பிலிருந்தே மூளை வளர்ச்சி கிடையாது. இந்நிலையில் என் மகனுக்கு மாற்றுத்திறனாளி நிதியுதவி மற்றும் பட்டா பிரச்சனை தொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க ஓசூரில் இருந்து தர்மபுரி செல்லும் அரசு பேருந்து ஏறினேன். அப்போது நடத்துனரிடம் ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் எனக்கூறி ஏறினோம்.
ஆனால் இப்பொழுது பேருந்து மாவட்ட ஆட்சியரகம் செல்லும் எனக் கூறி ஏற்றுக் கொண்ட பேருந்து நடத்துனர் கிருஷ்ணகிரி நெருங்கியவுடன் பேருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லாது பாலத்தின் மேலே சென்று விடுவோம் நீங்கள் கீழே இறங்குங்கள் எனக் கூறி தரக்குறைவாக பேசினார்.
மாற்றுத்திறனாளி மகனை தூக்கிச் செல்வதில் சிரமம் இருக்கும் எனக் கூறியும் அவர் நடுவழியில் இறக்கி சென்றுவிட்டார். இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.