காவல்துறையினர் விசாரணை பயத்தால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..?
காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்துவார்கள் என்ற பயத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மெய்யனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் மணிகண்டனை அழைத்துக் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இத்தகைய சம்பத்தினால் இரு வீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மணிகண்டன் சிறுமியிடம் மீண்டும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர் திரும்பவும் மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் மணிகண்டன் வெளியூருக்கு வேலைக்கு சென்றுள்ளதால் அவரது தாய் பழனியம்மாளை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். நாள் முழுக்க காவல் நிலையத்திலேயே தனது தாயினை அடைத்து வைத்து விசாரணை செய்ததால் மணிகண்டன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும் தன்னையும் காவல்துறையினர் அழைத்து சென்று விடுவார்களோ? என்று அவர் பயந்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் மணிகண்டன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிகண்டனின் தற்கொலைக்கு சிறுமியின் பெற்றோர் தந்த புகார் தான் காரணம் என்று அவர் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.