கனமழை எதிரொலி: அறுவடைக்கு தயாரான பூண்டுகள் அழுகும் அபாயம்!!!
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக விவசாயிகள் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதாவது நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செய்யப்படும் அனைத்து காய்கறிகளும் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.
இந்த சூழலில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பூண்டு, கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு நீரில் மூழ்கி இருப்பதால் அழுகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏற்கனவே கொரோனா காலத்தில் பூண்டு கிலோவுக்கு சராசரியாக ரூ.200 முதல் ரூ.300 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது உலர வைக்கப்படாத பூண்டு கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.48 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதே நிலைமை நீடித்தால் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க கூடுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் மழையினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரி செய்யும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.