திருமண ஆசைகாட்டி 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… இளைஞர் போக்சோவில் கைது!
குன்னத்தூரில் 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று
திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து குன்னத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிக்குட்டை பகுதியில் வசிக்கும் வெள்ளியங்கிரி – மணியம்மாள் தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு கடந்த இரண்டு வருடங்களாக
தனியார் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20 -ம் தேதியன்று காலை வவேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளார். ஆனால் சிறுமி வேலைக்கு வரவில்லை என பனியன் நிறுவன உரிமையாளர் வெள்ளியங்கிரியை செல்போனில் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். இதையடுத்து உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் குன்னத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூர் அருகே படியூர் சோதனை சாவடியில் காணாமல் போன சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமி வேலை செய்த அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த துரையன் என்பவரது மகன் தங்கராஜ் (27) என்பவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று திருமணம் செய்து பாலியல்
துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காணாமல் போனதாக போடப்பட்ட வழக்கை போக்சோ வழக்காக மாற்றம் செய்து தங்கராஜ் – ஐ கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.