என்னை நீக்க எடப்பாடிக்கு தகுதியில்லை… ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ்!
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் 4 மாதத்தில் பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவில் இதுவரை இருந்து வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொருளாளருக்கான அனைத்து அதிகாரங்களும் பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஆகிய இரண்டு பதவிகளை இழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் உடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பிரபாகர் ஆகியோரும் கட்சியின் அனைத்து பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்: தன்னை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது எனத் தெரிவித்தார். மேலும் பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்த அவர், என்னை கட்சியில் இருந்து நீக்கிய கே.பி.முனுசாமி மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.