தெலுங்கானாவில் சோகம்: எலக்ட்ரிக் பைக் விபத்தில் சிக்கி 8 பேர் பலி..!
எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததில் 5 மாடி கட்டிடத்தில் தீ பரவியது. இதில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே 5 மாடி கட்டிடத்தின் கீழ்தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூம் மேல் மாடியில் லாட்ஜ் இயங்கி வருகிறது. நேற்று பைக் ஷோரூமில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பிறகு ஒரு சில ஊழியர்கள் மட்டும் இருந்தனர்.
10.30 மணியளவில் ஷோரூமில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ வேகமாக பரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 23 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ வேகமாக பரவியதால் ஷோரூமில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து செகந்திராபாத் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மேல் மாடியில் உள்ள லாட்ஜிக்கு பரவியது.
இந்த தீ விபத்தில் லாட்ஜில் தங்கியிருந்த 7 பேர் உடல் கருகியும், மூச்சு திணறல் ஏற்பட்டும் சடலமாக மீட்கப்பட்டனர். 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது. மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.