நடனமாடிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு … வலியால் துடித்ததை டான்ஸ் ஸ்டெப் என்று ரசித்த மக்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிஷ்னா பகுதியில் நடனக் கலைஞர் ஒருவர் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகேஷ் குப்தா என்ற நபர் பார்வதி வேடமிட்டு பக்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று முழங்காலில் அமர்ந்து மேடையிலே படுத்துக் கொண்டார். நெஞ்சு வலியால் அவர் துடித்ததை டான்ஸ் ஸ்டெப் என்று பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.சில நிமிடங்களுக்குப் மேலும் யோகேஷ் எழுந்திருக்காததால், சக நடிகர் அவரைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போதும் அவரிடம் எந்த அசைவும் இல்லாததால் நாடக குழுவினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே யோகேஷ் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்தே மக்கள் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் உடலளவில் ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர்.தற்போது கொரோனா பரவல் குறைந்திருந்த போதிலும், மக்களின் மன அழுத்தம் குறையவில்லை என்பதை அடிக்கடி மார்படைப்பு காரணத்தினால் நிகழும் உயிரிழப்புகளை வைத்துக் கண்டுகொள்ளலாம்.
2021 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த் சுக்லா தனது மும்பை குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் இறந்தது பெரும் சோகத்தைக் கிளப்பியது. அவரை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவ் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.