தோனி புகைப்படத்தை தவிர்த்தாரா சச்சின்? உண்மை என்ன?
ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி
தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை நினைவுகூர்ந்து சச்சின் டெண்டுல்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படத்தில் வேண்டுமென்றே முன்னாள் கேப்டன் தோனி இல்லாத புகைப்படத்தை தேர்வு செய்து பதிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்ற உலகக்கோப்பைக்கு பின், மீண்டும் உலகக்கோப்பையை இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. 28 ஆண்டுகள் காத்திருக்கு பின், தோனி தலைமையில் தான் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் அடையாளமான சச்சினின் கடைசி உலகக்கோப்பை என்பதால், அவருக்காக உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். அதனையே வீரர்கள் கூறி சச்சினுக்காக உலகக்கோப்பையை வென்றும் காட்டினர். ஏப்ரல் 2ஆம் தேதியுடன் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை நினைவுகூறும் வகையில் உலகக்கோப்பை கைகளில் ஏந்திய புகைப்படங்களை முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, நால்டாஜியாவை நினைவு கூர்ந்தனர். அதேபோல் சச்சின் டெண்டுல்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் புகைப்படத்தை பகிர்ந்தார்.
அந்தப் புகைப்படத்துடன், 12 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இந்திய அணி உலகக்கோப்பையை கையில் ஏந்தியது. என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் அதுதான் என்று குறிப்பிட்டார். அதேபோல் ரசிகர்களிடம், நீங்கள் அப்போது எங்கு இருந்தீர்கள்? எப்படி கொண்டாடினீர்கள் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கொண்டாட்ட நிகழ்வு குறித்து பதிலளித்தனர். இதனிடையே சச்சின் டெண்டுல்கர், வேண்டுமென்றே கேப்டன் தோனி இருக்கும் உலகக்கோப்பை புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிடவில்லை என்று ரசிகர்கள் சிலர் விமர்சித்தனர்.
Australia-க்கு ஏதிராக Ashwin பயன்படுத்திய Two-Card Trick Bowling சச்சின் மட்டுமல்லாமல் யுவராஜ் சிங்கும் தோனியுடனான புகைப்படத்தை பதிவிடவில்லை என்றும் சர்ச்சைகள் கிளம்பியது. ஏற்கனவே கம்பீர் சில தருணங்களில், உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி மட்டும் காரணமல்ல. அது அனைத்து வீரர்களின் கூட்டு உழைப்பு என்று கூறி வந்துள்ளார். இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தோனி வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும், தோனியை இருட்டடிப்பு செய்வதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். சமூக வலைதளங்களில் இதுகுறித்து பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து விசாரிக்கையில், சச்சின் பதிவிட்ட புகைப்படத்தில் ஹர்பஜன் சிங் பின்னால் தோனி நின்றுகொண்டு தான் இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. ஹர்பஜன் சிங்கின் தலை, தோனியின் முகத்தை மறைப்பதால், அந்தப் புகைப்படத்தில் தோனியின் முகம் தெரியவில்லை. அதேபோல் எந்தவொரு தொடரை வென்ற பின்னரும் கோப்பையை வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் பழக்கம் உடையவர் தோனி. உலகக்கோப்பையை வென்ற நாளிலும் தோனி அதைதான் செய்தார். அதேபோல் ஒவ்வொரு வீரர்களும் உலகக்கோப்பையை நினைவு கூர்ந்து பதிவிட்ட புகைப்படங்களில் தங்களை முன்னிறுத்திய புகைப்படங்களையே பதிவிட்டனர். அந்த வகையில் சச்சின் தனது கையில் உலகக்கோப்பை இருக்கும் புகைப்படத்தையும், அணியினர் அனைவரும் உடனிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இந்த புகைப்படத்தில் சச்சின் தோனியை தவிர்த்தோ, வேண்டுமென்றே புறக்கணித்தோ பதிவிட வேண்டிய அவசியமில்லை என்பது தெரிய வந்துள்ளது.