நெகிழ்ச்சி: பக்கவாத நோய் பாதித்த மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பணம் உதவி
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் இணைந்து மருத்துவ சிகிச்சைக்காக பணம் உதவி அளித்த நிகழ்வு பொதுமக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடேஸ்வரா அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜஸ்வந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மாணவனின் மருத்துவ செலவிற்காக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் பள்ளியில் உள்ள சாகர் கால்பந்து விளையாட்டு குழு மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தலைமையாசிரியர் நெப்போலியன் அவர்களிடம் ரூபாய் 20 ஆயிரம் தொகையை மருத்துவ சேவை செலவிற்காக அளித்தனர்.
அந்தத் தொகையை பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் ஜஸ்வந்தின் பெற்றோரிடம் வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட பெற்றோர் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.