எலிசபெத் ராணி மறைவு : இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் அரியணை..!!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று மாலை 6 மணிக்கு இறந்தார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அரியணை அமர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை தான் இங்கிலாந்தின் 56 வது பிரதமராக லிஸ் ட்ரஸ்ஸை முறைப்படி நியமித்தார் ராணி எலிசபெத். தன் வாழ்நாளில் அவர் நியமித்த 15 வது பிரதமர் லிஸ்ட் ட்ரஸ்.
வழக்கமாக இந்த நிகழ்ச்சி பக்கிங்காம் அரண்மனையில் தான் நடைபெறும் ஆனால் ராணிக்கு நடப்பதில் சிரமம் இருந்ததால் இந்த முறை ஸ்காட்லாந்தில் நடந்தது. லிஸ் ட்ரஸுடன் கை, கால்கள் நடுங்கியபடி கைத்தடியுடன் மிகவும் சோர்வாகவே ராணி காட்சியளித்தார். இந்நிலையில் ராணி எலிசபெத் நேற்று இயற்கை எய்தினார்.
இதனால் ராணி எலிசபெத்தின் மகனான 73 வயது சார்லஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னராகிறார். சார்லஸ் தான் நீண்ட கால அரச குடும்ப வாரிசு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
கடைசியாக சார்லஸின் கவனம் பெற்ற கருத்தாக இருப்பது அவர் உலக பொருளாதார கூட்டமைப்பு நிகழ்வில் பேசியது. 2020 ல் இந்தக் கூட்டத்தில் பேசிய சார்லஸ், இந்த உலகம் பொருளாதார வளர்ச்சிகளைப் பெருக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் நாம் குவிக்கும் அதிகப்படியான செல்வங்களால் என்ன பயன்? ஒருநாள் இந்த உலகம் புவி வெப்பமயமாதல் விளைவுகளால் பேரழிவுகளை சந்திக்கும் போது நாம் சேர்ந்த செல்வமும் சேர்ந்தே அழிவதை காணலாம் என்று எச்சரித்தார். இயற்கை விவசாயம், இயற்கை உணவு ஆகியனவற்றிற்கு சார்லஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.