இரண்டு நாள் சுற்றுப்பயணம்: இன்று கேரளா வந்தார் பிரதமர் மோடி..!!
கேரளாவுக்கு இன்று வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் போதிய பலம் இல்லாத கட்சியாக பாஜக இருந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, முதலில் கேரளாவுக்கு இன்று மாலை பிரதமர் மோடி வருகை தருகிறார். கொச்சி விமான நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடி, 6 மணிக்கு ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான கல்லடி கிராமத்துக்கு சென்று ஆதி சங்கர ஜென்மபூமியை பார்வையிடுகிறார்.
அதன் பிறகு, நாளை காலை 9.30 மணிக்கு கொச்சி கடற்படை தளத்திற்கு செல்லும் மோடி, அங்கு முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பு உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ரூ,1,950 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள கொச்சி மெட்ரோ ரயில்வேயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதையடுத்து, குருப்பந்தாரா – கோட்டயம் – சிங்கவனம் ரயில்வே வழித்தடத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் நகர் மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
கேரளாவில் இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர், பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மங்களூருக்கு செல்கிறார்.