பிரதமர் மோடி ஆசை நிறைவேறாது: சிபிஐ குறிக்கோள் எனக்கு தெரியும் – சிசோடியா
பிரதமர் நரேந்திர மோடி என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று சிபிஐக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் என டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார். மாநில கலால் வரி கொள்கை மூலம் டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா மோசடி செய்துள்ளதாக சிபிஐ தீவிர விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் டெல்லி என்.சி.ஆர். அருகே காசியாபாத்தில் உள்ள வங்கியில், மணீஷ் சிசோடியாவின் மனைவி பெயரில் உள்ள லாக்கரை சிபிஐ சோதித்தது.
இது குறித்து மணீஷ் சிசோடியா பேசுகையில் எப்படியாவது தன்னை சில மாதங்களாவது சிறையில் அடைத்து பார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக கூறினார்.
ஆகஸ்ட் 19ம் தேதி மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ சுமார் 14 மணி நேரம் சோதனை நடத்தியது. அப்போது சிசோடியாவின் மனைவி பெயரில் இருந்த வங்கி பெட்டகம் ஒன்றின் சாவியை சிபிஐ அதிகாரிகள் பெற்றுச்சென்றனர்.
சோதனையின்போது சிபிஐ அதிகாரிகள் நன்றாக நடந்து கொண்டனர். நாங்களும் முழு ஒத்துழைப்பு அளித்தோம். வங்கி லாக்கரில் ஒன்றும் இல்லை என்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். பாவம் அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம். எப்படியாவது, எதை செய்வது என்னை ஒன்றிரண்டு மாதங்கள் சிறையில் வைத்தே ஆக வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு அழுத்தம் அளித்து வருகிறார்.
செய்வதை செய்யட்டும், அது அவரது அரசியல் பாணி. என் வீட்டிலும், பெட்டகத்தில் செய்யப்பட்ட சோதனையில் முறைகேடாக ஒன்றும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதில் மகிழ்ச்சி என கூறினார்.