எதிர்க்கட்சிகளின் பாட்னா சங்கமம்- பங்கேற்றது யார் யார்?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்த ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் தற்போது நடைபெற்று வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.லோக்சபா தேர்தலில் காங்கிரஸையும் உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை உருவாக்குவதில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் தீவிரமாக இருந்து வருகிறார். இதற்காக பீகார் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவுடன் இணைந்து பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று ஆதரவு திரட்டினார் நிதிஷ்குமார்.இந்த சந்திப்புகளின் அடுத்த கட்டமாக பீகார் தலைநகர் பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 12-ந் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டதற்காக இந்தக் கூட்டம் ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பீகார் முதல்வர் ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமார்,பீகார் துணை முதல்வர் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்,அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மேற்கு வங்க முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி,டெல்லி , பஞ்சாப் முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான்,சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,சிவசேனா (யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே,காஷ்மீர் முன்னாள் முதல்வர் தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி
இடதுசாரிகளின் தலைவர்கள் சீதாராம் யெச்சூர், டி.ராஜா, தீபங் பட்டாச்சார்யா
ஜார்க்கண்ட் முதல்வர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஹேமந்த் சோரன்
ஹரியானா முன்னாள் முதல்வர் இந்தியதேசிய லோக் தள் ஓம் பிரகாஷ் சவுதாலா
அஸ்ஸாம் ஏயூடிஎப் மவுலானா பக்ருதீன் அஜ்மல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பாட்னா எதிர்க்கட்சிகள் சங்கமத்துக்கு சில அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மாநிலங்களில் ஆட்சியில் இருந்த போதும் மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக போக விரும்பும் கட்சிகள், மாநிலங்களில் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்தாக வேண்டிய கட்சிகள், பாஜகவை பகைத்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகளுடன் உறவாடி கெடுக்கும் கட்சிகள் என்பவை அடையாளம் காணப்பட்டு பாட்னா கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ் அல்லது டிஆர்எஸ்)ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்,ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம்.கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ,பஞ்சாப் சிரோமணி அகாலி தளம் உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி.ராஷ்டிரிய லோக் தள் (ஆர்.எல்.டி)- இதன் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, திடீரென பாட்னா கூட்டத்துக்கு வர இயலவில்லை- நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள் என கடிதம் அனுப்பி உள்ளார்.டெல்லி முதல்வர் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்- பாட்னா எதிர்க்கட்சிகள் சங்கமத்துக்கு தொடக்கம் முதலே ஆதரவு தெரிவித்து வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது திடீரென, டெல்லி சேவைகள் தொடர்பான மத்திய பாஜக அரசின் மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிப்போம் என காங்கிரஸ் உறுதி அளித்தால்தான் பாட்னா கூட்டத்தில் பங்கேற்போம் என நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தமது படை பரிவாரங்களுடன் பாட்னா கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *