மன்னிப்பு கேட்காவிட்டால் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை பாயும்: அமைச்சர் எச்சரிக்கை!
தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஊழல் நடந்து இருப்பதாக கூறிய தமிழ்நாடு பாரதிய ஜனநாயக கட்சித் தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பேட்டி அளித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து டெண்டர் குறித்த தொடர்பான பெட்டகம் குறித்து விளக்கமளித்தார். இந்த டெண்டரை அனிதா டெக்ஸ்கார்ட் என்ற நிறுவனம் பெற போவதாக அண்ணாமலை தெரிவித்த நிலையில் ஸ்ரீ பாலாஜி என்ற நிறுவனம் தான் டெண்டரைப் பெற்றுள்ளது என கூறினார்.
இந்த டெண்டர் தொடர்பாக அண்ணாமலை காழ்ப்புணர்ச்சியுடன் கூறி வருவதாகவும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வரும் அண்ணாமலை நாகரீகமான முறையில் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும், சில ஊடகங்கள் 70 கோடி ரூபாய் இழப்பு என்று எழுதுவது முறையில்லை என அமைச்சர் கூறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு தாய்சேய் பெட்டகம் தலா 1996 ரூபாய் 91 காசுகளுக்கு டெண்டர் விடப்பட்டதாக கூறிய அமைச்சர் தற்போது நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் 2180 ரூபாய் 71 காசுகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.