வெற்றிமாறன் விடுதலை படம் என்னுடைய நாவலில் இருந்து திருடப்பட்டதா? சோளகர் தொட்டி பாலமுருகன் விளக்கம்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் சோளகர் தொட்டி நாவலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக அந்த நாவலை எழுதிய எழுத்தாளர் பாலமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.சோளகர் தொட்டி பாலமுருகன் விளக்கம்ம: விடுதலை திரைப்படமானது பார்வையாளர்களுக்கு விருவிருப்பான ஒரு வெற்றி படத்திற்கான அனுபவத்தோடு சில அரசியல் விடயங்களையும், சில குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்வதாகவும் செல்கின்றது.

திரைப்படத்தின் மையக் கருவும் , கதைக்களமும், பாத்திரங்களும் சோளகர் தொட்டியின் பின் புல நீட்சியாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பாத்திரங்களாகவும் நாவலை வாசித்த பலருக்கும் வருவது போன்ற எண்ணம் எனக்கும் எழுந்தது. குறிப்பாக இத் திரைப்படத்தின் துவக்க காட்சியான இரயில் வெடிப்பும், இறுதி காட்சியான பெருமாள் என்ற மனிதரை பிடிக்கும் காட்சியையும் எடுத்து விட்டால் கதையின் களம் மலைப் பகுதி, பழங்குடி கிராமம் மேலும் அது தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதி. காவல்துறையின் விசாரனை முகாமான “ஒர்க் ஷாப்” வதை முகாம். அங்கு பணி புரியும் ஒரு காவல்துறையில் மனித நேயம் உள்ள ஒரு காவலர். சோளகர் தொட்டி நாவலில் இந்த காவலருக்கு பெயர் சுபாஷ். கையறு நிலையில் மனித நேயத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் குணம் கொண்ட மனிதன். அது மட்டுமல்ல மல்லி என்ற இளம் பெண்ணை முகாமிலிருந்து மீட்டு உயிருடன் ஜீப்பில் கொண்டு போய் அவள் வீட்டில் சேர்க்கும் மனிதன். வதைகளுடன் மக்கள் வாடும் போது ஏதோ ஒரு வகையில் ஆறுதலாய் நிற்கும் ஒரு போலிஸ்காரன்.

அது ஒரு தொடர் செயல்பாட்டின் வெளிப்பாடு. வெகு காலம் அம் மக்களுடன் பயணித்த அனுபவத்தின் படைப்பு வடிவாக்கம். ஆனால் வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் பல இளம் தலை முறை படைப்பாளருக்கு முன்னுதாரணமாக இருப்பவர் அவர் ஒரு படைப்பை அனுகும் போது அறிவு நாணயத்தோடு அணுகி இருக்க வேண்டும். ஒரு உண்மையை திரித்து கூறுவது, நிகழ்வுகளை தவறான வரலாற்றுடன் இணைப்பது, மற்றவரின் படைப்பை சில மாற்றங்கள் செய்து தனது படைப்பாக காட்டுவது என படைப்பு அறம் சார்ந்த நேர்மையை அவர் இழந்திருக்க வேண்டியதில்லை.

மேலும் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட பழங்குடி மற்று இதர மலையோர கிராம மக்களின் குரலை வெளிப்படைதன்மையோடு உலகளாவிய அளவில் மனித நேயத்துடன் கொண்டு சென்றிருக்க முடியும். வன்முறைகள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் பழங்குடி வாழ்க்கையும், நேயமும் அழிக்கப்பட்ட அம் மக்களின் வாழ்வையும் கூடுதலாக பேசியிருக்க முடியும். படைப்பு சார்ந்த அறம் வீழ்ச்சி அடைந்திருக்காது. இவ்வாறு சோளகர் தொட்டி பாலமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

Recommend video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *