தாய்லாந்து செல்கிறார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே..!!
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தர போறோம் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன் ஒ சா அறிவித்துள்ளார். இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்த பொருளாதார சீரழிவை சரி செய்ய கோரி இலங்கை மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களின் விளைவாக முதலில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அந்த நாட்டின் தற்காலிக பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரியும் மக்கள் கிளர்ச்சி தொடர்ந்தது.
உச்சகட்டமான போராட்டங்களின் போது ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் கைப்பற்றினர். இதையடுத்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடினார்.
மேலும் ஜனாதிபதி பதவியும் கோத்தபாய ராஜினாமா செய்தார். இதனால் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறி முதலில் மாலத்தீவு நாட்டில் கோத்தபாய தஞ்சமடைந்தார். ஆனால் மாலத்தீவில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தர எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் மாலத்தீவில் இருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு சென்று பதுங்கினார் கோத்தபய ராஜபக்சே. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்து செல்கிறார் கோத்தபய ராஜபக்சே. சிங்கப்பூரில் தொடர்ந்து தாம் தங்க முடியாத நிலையில் தாய்லாந்து நாட்டின் அடைக்கலம் கோரி இருந்தார் கோத்தபாய.
இது தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன் ஒ சா கூறுகையில், கோத்தபய ராஜபக்சே வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என கூறியிருக்கிறார்.