ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ..!! கட்டுக்குள் கொண்டு வர போராடும் தீயணைப்பு ஊழியர்கள்..!
ஸ்பெயின் நாட்டில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை சுமார் 70 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் வசித்து வரும் பல்வேறு உயிரினங்கள் இந்த காட்டுத்தீ காரணமாக இறந்து இருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தீயை அணைக்க குவிந்து இருக்கும் தீயணைப்பு படை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு ஊழியர்கள் இணைந்து தொடர்ந்து போராடி தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் கலொன்ங் நகரில் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் காட்டுத்தீ காரணமாக அந்த பகுதியில் தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து பாதுகாப்பு காரணமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் கோஸ்டா பிராவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். தொடர்ந்து காட்டுத் தீ மளமளவென பரவி வருவதால் அப்பகுதி தொடர்ந்து புகைமூட்டமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக பலருக்கு மூச்சு திணறல், சுவாசப் பிரச்சனை, கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. இவற்றை கருத்தில் கொண்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து மாற்று இடங்களுக்கு பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.