போராடுபவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; மீறினால் கடும் நடவடிக்கை – ஐ.நா எச்சரிக்கை
மியான்மரில், கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, ராணுவம் புதிய அரசை ஏற்க மறுத்தது.
இதனால், குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராணுவம் எச்சரித்தது. பல இடங்களில் இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக், “மியான்மரில் அமைதியாகப் போராடுபவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடுக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.