தமிழகத்தில் இன்று நாளையும் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியதாவது, “வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (பிப்.21, 22) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 90 மி.மீ., குன்னூரில் 70 மி.மீ., தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 60 மி.மீ., நீலகிரி மாவட்டம் அலகாரி எஸ்டேட்டில் 50 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, கடலூா் மாவட்டம் மேமாத்தூரில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.