நெய்வேலியில் துப்பாக்கிச்சூடு; கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டு, தடியடி – நடப்பது என்ன?
என்.எல்.சி.யை முற்றுகையிட்டு பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர்.
நெய்வேலியில் விளைநிலங்களை கையக்கப்படுத்தி சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பாமகவினர் என்.எல்.சி. நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீஸ் பாதுகாப்பை மீறி என்.எல்.சி.யை நோக்கி முன்னேற முயன்ற அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டம் நடத்தினர். மேலும் காவல்துறையினர் மற்றும் வாகனங்கள் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர்.