குமுறும் ஓபிஎஸ்…இதுக்கு பருத்திமூட்ட குடவுன்லையே இருந்திருக்கலாம்…
வெங்கட்ராம்.
‘வாழ்க்கை ஒரு வட்டம் டா’ என்று நடிகர் விஜய் ஒரு படத்தில் வசனம் பேசி இருப்பார். அது இப்போது ஓபிஎஸ் விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த சிறிது நாட்களில் நடந்த பரபரப்பு சம்பவங்களை யாரும் மறந்திருக்க முடியாது. சூதாட்டத்தில் யாருக்கு ரம்மி கிடைக்கும் என்று பார்ப்பது போல் முதல்வர் பதவி யாரிடம் செல்லும் என்ற பரபரப்பு அனைவரிடமும் தொற்றிக் கொண்டிருந்தது. ஓரிரு நாட்கள் முதல்வராக இருந்த ஓபிஎஸ் அவர்கள் தங்கள் பதிவையே ராஜினாமா செய்துவிட்டு மற்ற அனைவரும் ஒன்றாக இணைத்து சசிகலா அவர்களை முதல்வர் ஆக்க முடிவெடுத்தனர். அனைவரும் சசிகலா தான் முதல்வர் என்று நினைப்பில் இருக்கும் போது திடீரென்று ஒரு நாள் இரவு மெரினாவில் அலைகள் பொங்குவதை விட வேகமாக பொங்கி எழுந்தார் ஓபிஎஸ். அதிமுகவை சசிகலா குடும்பத்திடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற அவர் முழக்கம் பட்டித் தொட்டி எங்கும் பயங்கரமாக பரவி, ஓபிஎஸ் அதிமுகவை காக்க வந்த தேவதூதர் போல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டார். அப்படி திமிரி எழுந்த ஓபிஎஸ் இன் நிலைமை இப்போது மிகவும் பரிதாபமாக உள்ளது. எந்த கட்சியை அவர் காப்பாற்ற வேண்டும் என்று தர்ம யுத்தம் நடத்தினாரோ இப்போது அதே கட்சி அவரை நீக்கிவிட்டது. இப்போது வேறு வழியின்றி மீண்டும் சசிகலாவை சந்திக்க போகிறேன் டிடிவி தினகரனோடு இணைந்து பயணிக்க போகிறேன் என்று பேட்டி கொடுத்துள்ளார். இதைப் படிக்கும் உங்களுக்கு ஏதேனும் திரைப்படம் காட்சி நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.