திருமண இசைச்சத்தம்…….. உறைந்தது ரத்தம்…….

வெங்கட்ராம்


ஒளிமாசு பற்றின எத்தனை விழிப்புணர்வு வந்தாலும் மக்கள் அதனை காதில் வாங்குவது போல் இல்லை . திருமண மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் சத்தமாக ஒலிபெருக்கி வைத்து இசைப்பதை மிகவும் பெருமையாகி கருதுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. 22 வயது சுரேந்திர குமார் என்கிற இளைஞருக்கு சமீபத்தில் பெற்றோர்களால் திருமணம் நிச்சயமிக்கப்பட்டு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திருமணம் நடந்திருக்கிறது. திருமண நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பலமான ஒலிபெருக்கிகளில் இசை மிகவும் சத்தமாக இசைப்பது போல் வைக்கப்பட்டிருக்கின்றன. மணமகனுக்கு அந்த இரைச்சல் சத்தம் அசவுரியத்தை உண்டாக்கி இருக்கிறது. இதனால் பலமுறை மணமகன் சத்தத்தை குறைக்குமாறு தன் சொந்தங்களிடம் கூறியுள்ளார். இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் அல்லது பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் யாரும் சத்தத்தை குறைக்கும் முயற்சி எடுக்கவில்லை. மணமேடையில் மாலை மாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மணமகன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சொந்தங்கள் அனைவரும் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கே அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தேவையில்லாத கௌரவத்திற்காகவும் வெட்டிக் கொண்டாட்டங்களுக்காகவும் நாம் செய்கின்ற ஒரு செயல் சில நேரம் நாம் சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. மருத்துவர்களின் எச்சரிக்கையையும், அரசாங்கத்தின் அறிவுரையையும் இனியாவது மக்கள் கேட்பார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *