புதையல் தோண்ட பூஜை செய்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு, கொலையா? என விசாரணை

ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் புதையல் தோண்டுவதற்காக பூஜை செய்த விவசாயி உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து கெலமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (50) இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி உடல்நிலை குறைவால் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார், இவருக்கு நாகராஜ் (24) சிவகுமார் (22) என்ற மகன்களும் தனலட்சுமி (20) என்ற மகளும் உள்ளனர்.

லட்சுமணன் இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையலுக்காக குழி தோண்டி அதில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜைகள் செய்ததாக கூறப்படுகிறது. பூஜை செய்த சிறிது நேரத்திலே அவர் குழியிலியே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்

லட்சுமணன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் கெலமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சுமணன் இறந்து கிடந்த இடத்தில் இரண்டு அடி ஆழத்துக்கு குழி தோண்டி, அதில் பூஜை பொருள்கள் மற்றும் கோழியின் ரத்தம் கொண்டு பூஜை செய்ததற்கான அடையாளங்கள் உள்ளது. இதனால் அவர் புதையலுக்காக பூஜை செய்து உள்ளார் என கூறப்படுகிறது.

லட்சுமணனின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால் அவர் எவ்வாறு இறந்தார் என்ற குழப்பம் நீடிக்கிறது. அவரை யாரேனும் கொலை செய்தார்களா அல்லது அவர் தானாகவே உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *