வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் – ரணில் விக்ரமசிங்க
இலங்கையில் போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய அடுத்து, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அவர்களில் பலர் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.
அதேபோல், பிரதமர் மாளிகைக்குள்ளும் நுழைந்து போராட்டக்காரர்கள் மாளிகைக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
எனினும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணி தொடரும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைதி வழியில் போராட்டம் செய்பவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆனால், போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களையும், அரசு கட்டிடங்களுக்கு நுழைந்து பொருட்களை திருடியவர்களையும் மன்னிக்க முடியாது என ரணில் தெரிவித்துள்ளார்.
வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றும், குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை வழங்கும் என்றும் இதில் எவரும் தலையிட முடியாது என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.