வாடிப்பட்டி வியாபாரி கொலை: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் யூனியன் ஆபீஸ் காலணியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மகன் முருகன் வயது(47). கொய்யாப் பழ வியாபாரியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் தாதம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகில் முகத்தில் குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார்யாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் தாதம்பட்டி கண்மாய் புளியந்தோப்பு பகுதியில் பதுங்கியிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது தாதம்பட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் வினோத்குமார் (வயது19), ராமசந்திரன் மகன் சூரியபிரகாஷ் வயது(19) மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும், 4 பேரும் சேர்ந்து கொய்யா பழ வியாபாரி முருகனை கொலை செய்ததும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொய்யாப்பழ வியாபாரி முருகன் தொடர்ந்து மூன்று நாட்களாக ஒரு பெண்ணை அழைத்து வந்து கால்நடை மருத்துவமனை அருகே அமர்ந்து பேசி வந்ததாகவும், சம்பவத்தன்றும் அப்பெண்ணுடன் வந்த போது எதற்காக இங்கே வருகிறாய், இது எங்க ஏரியா என்று 4 பேரும் கூற இதில் வாய்த்தகராறு ஏற்பட்டு முருகனுக்கும் 4 பேருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நான்கு பேரும் அங்கு உடைந்து கிடந்த கண்ணாடியை எடுத்து முருகனின் முகத்தில் சரமாரியாக குத்திவிடவே அவர் மயங்கி கீழே விழுந்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.