அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு..!! காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை போராட்டம்..!!
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் 17 முதல் 21 வயது வரையிலான இருபாலரும் 4 ஆண்டுகள் வரை முப்படைகளில் பணிபுரியலாம். அதன்பின்னர் சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். பணித் திறன் அடிப்படையில் 25 சதவீதம் பேர் நிரந்தரம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதேநேரம் இவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் எதுவும் வழங்கப்படாது. இந்நிலையில், அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
ஒடிசா மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தெலுங்கானாவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.