குறு வணிகர்களுக்கு முதலமைச்சரின் கட்டணச் சலுகை

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு பெறாத சிறு குறு வணிகர்கள் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர, ரூ.500 சேர்க்கைக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து இன்று (ஜூலை 15) முதல் 3 மாதங்களுக்கு விலக்கு அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’ வணிகர்களின் நலனுக்காக நாட்டிலேயே முதன் முதலாக தமிழகத்தில் 1989ம் ஆண்டு ‘தமிழ்நாடு வணிகர் நல வாரியம்’ தோற்றுவிக்கப்பட்டது.
இதன்மூலம், வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, குடும்ப நல உதவி, மருத்துவம், கல்வி உதவி, விளையாட்டுப் போட்டி, தீ விபத்து பாதிப்பு, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதியுதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என 7 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த வாரியத்தின் மூலம் கடந்த மே மாதம் 31ம் தேதி வரை 8, 873 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியே 5 லட்சத்து 73 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. வணிகவரித் துறை அமைச்சரால் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர இணையவழி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள், http://www.tn.gov.in/tntwp/tamil என்ற இணைய சேவையைப் பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். இணையதள வழியில் பதிவு செய்ய சிரமம் ஏற்பட்டால், அருகில் உள்ள வணிக வரி வரி விதிப்பு அலுவலகத்தை அணுகி, தங்கள் பதிவை மேற்கொள்ளலாம். இதற்காக வரி விதிப்பு அலுவலகத்தில் இணையம் சார்ந்த சேவை வசதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வணிகவரி வரிவிதிப்பு அலுவலகங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம்.
மேலும், வணிகர் நல வாரியத்தை சீரமைத்து, உறுப்பினர் சேர்க்கையை செம்மைப்படுத்தும் வகையிலும், வாரியத்தின் மூலம் நலத் திட்டங்களை செயல்படுத்த ஏதுவாகவும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் பதிவு பெற்று, விற்று முதல் அளவு ரூ.40 லட்சத்துக்கு உட்பட்ட சிறு வணிகர்கள், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு பெறாத குறு வணிகர்கள் ஆகியோர் இந்த வாரியத்தில் உறுப்பினராக சேர, ரூ.500 சேர்க்கைக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து இன்று (ஜூலை 15) முதல் 3 மாதங்களுக்கு விலக்கு அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்