சம்மர் போல் சுட்டெரிக்கும் வெயில்; 100 டிகிரியை தாண்டியதால் மக்கள் அவதி
100 டிகிரி பாரன்ஹீட்.க்கும் அதிகமாக கொளுத்தும் வெயில்.. கோடை காலம் போல் அனல் காற்றும் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி. ஈரோட்டில் கோடை காலம் போல், 100 டிகிரி பாரன்ஹீட்.டை தாண்டி வெயில் கொளுத்துவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்..
ஏப்ரல் , மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிப்பது வழக்கம். அதன் பின் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் குளிர்ந்த பருவ காற்றால் சீதோஷ்ண நிலை குளிர்ச்சியாக மாறும். அக்டோபர் மாதங்களில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை தொடங்கி நேரடி மழை பொழிவு இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடுமையான வெயில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெயில் உள்ளது. நேற்று ஈரோட்டில் 102 டிகிரி வெயில் பதிவான நிலையில் இன்றும் அதே அளவிற்கு வெப்ப நிலை காணப்படுகிறது. வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் வாகனங்களில் செல்வோர் அவதிக்கு ஆளாகின்றனர். புறநகர் சாலைகளில் அதிக வெப்பத்தால் கானல்நீர் காணப்படுகிறது.
வெயிலின் தகிப்பை தணிக்க குளிர்பான கடைகளை மக்கள் நாடுகின்றனர். காலை முதலே வெயில் சுட்டெரிப்பதாகவும் இதனால் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலை இருப்பதாகவும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தெரிவித்தனர்..