பொறியியல் கலந்தாய்வு ! 26ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ் ! பிஇ, பிடெக் படிக்க 2.24 லட்சம் பேர் விண்ணப்பம்..
ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி
இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 4ஆம் தேதியான நேற்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். விண்ணப்ப பதிவு செய்த மாணவர்கள் இன்று முதல் ஜூன் 9ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.2023-24ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த மே 5ம் தேதி தொடங்கியது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1.5 லட்சம் இடங்களுக்கு தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். இதனையொட்டி இன்று மாலைக்குள் விண்ணப்ப பதிவு செய்யும் மாணவர்கள் ஜூன் 9ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தி சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மாலை 6 மணி வரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 073 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 301 பேர் கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 737 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. அத்துடன் கடைசி நாள் என்பதால் விண்ணப்ப பதிவு செய்யாத மாணவர்கள் உடனடியாக விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.விண்ணப்பித்த மாணவர்களின் ரேண்டம் எண் ஜூன் 6ஆம் தேதி வெளியாகும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 5முதல் 20ஆம் தேதி வரை நடத்தப்படும். மேலும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்படும். அதில் ஏதும் தவறுகள் இருந்தால், அதன் புகார்களை ஜூன் 26 முதல் 30ஆம் தேதி வரை சேவை மையங்களில் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.சிறப்பு பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, அண்ணா பல்கலை மற்றும் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் நாளை முதல் நடைபெற உள்ளது. இதில் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் நேரில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கு ஆன்லைன் வாயிலாகவே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 2 முதல் 5ஆம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையும் நடத்தப்படும். துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி நிறைவு பெறும். எஸ்சி காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1, 2, 3ஆம் தேதிகளில் நடை பெறும்.