‘மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது’- டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும் படி டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர், பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளையாட்டுத் துறை அமைச்சகம் குறுக்கிட்டு விசாரணை ஆணையம் அமைத்தது.

மேரி கோம் தலைமையிலான ஆணையம் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்துவிட்டது. எனினும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படவேண்டும் என்று கோரி ஏழு மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதி பிஎஸ் நரசிம்ஹா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. அந்த மனு மீது டெல்லி போலீஸ் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடும்படியும் உத்தரவிட்டனர். மேலும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாதவகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உத்தரவிட்டனர்.

முன்னதாக பெண் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாகக் கூறி கடந்த ஜனவரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். பாலியல் தொல்லை குறித்த தங்களின் புதிய புகார் மீது முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாததைக் கண்டித்தும், ஏற்கெனவே நடந்த விசாரணைக் குழுவின் அறிக்கை விவரத்தைக் கோரியும் வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *