ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு…!
காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராமத்தில் ஏரியில் மூழ்கி விவசாயின் இரு குழந்தைகள் உயிரிழப்பு. காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அருகே உள்ள 144 தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாஸ்கர். இவரது குழந்தைகள் விஜய் (வயது 9), பூமிகா (வயது 8), இருவரும் நெல்வாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு, மூன்றாம் வகுப்பில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகள் இருவரும் இன்று பள்ளி முடிந்து வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பெற்றோர்களை பார்க்க சென்று உள்ளனர். அங்கு இயற்கை உபாதை கழித்துவிட்டு அருகில் உள்ள ஏரியில் கை, கால்களை கழுவ சென்று உள்ளனர்.
வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோர் நீண்ட நேரமாக குழந்தைகள் இருவரும் வராததால் சந்தேகம் அடைந்து சென்று பார்த்த பொழுது இரு குழந்தைகளும் நீரில் மூழ்கியது தெரிய வந்தது. உடனடியாக குழந்தைகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு இரு குழந்தைகளும் உயிரிழந்து விட்டனர் என தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தைகள் இருவரையும் கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் பெற்றோரிடமும் கிராம மக்களிடமும் பேசி உயிரிழந்த விஜய்,பூமிகா, ஆகிய இரு குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.