HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 52

எனக்கான திறனை எப்படி கண்டுகொள்வது?

எனக்கான திறனைக் கண்டுகொள்வது எப்படி எனும் தேடலை விட, கேள்விதான் பலருக்குள் இருக்கும். ஆம், தேடல் உங்களுக்குத் தேவையானதைத் தரும், கேள்வியும் தேவையானதைத் தரும், ஆனால் தேடல்தான் அதி தீவிரமாக வேலை செய்யும். தொடர் தேடல் உங்களுக்கு நீங்கள் நினைத்திராத புதையலையே தரும். “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்” என்று விவிலியத்தில் வரும் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானது என்பதை என் வாழ்வில் பலமுறை கண்டுள்ளேன். ஆம் கேட்டால்தான் கிடைக்கும், கேள்வி கேட்கும் திறனால்தான் நம்மை நாம் கூர்மைப் படுத்தமுடியும். உங்களுக்குத் தேவையானது கிடைக்கும் வரை தட்டிக்கொண்டே இருங்கள் அதில் எவ்வித சோர்வும் இருக்கக்கூடாது. இவ்வளவு விடாமுயற்சியோடு இருக்கிறானே இவனுக்கு நாம் எதாவது செய்தாக வேண்டும் எனும் எண்ணம் இயற்கைக்கு ஏற்படும். தேவையானதை தீவிரமாகத் தேடும் போது இந்த அண்டம் முழுதும் உறுதுணையாக உங்களுக்கு உதவிட வரும் என்பது உளவியல் உண்மை.

எல்லாத் தகவலும் பொதிந்து கிடக்கும் கூகுள் கூட நாம் தேடினால்தால் அல்லது கேட்டால்தான் நமக்கான தகவலைத் தரும். இவரு பாக்குறதுக்கு ரொம்ப நல்லவரா இருக்காரே அல்லது இவரு பாக்குறதுக்கு ரொம்ப பரிதாபமா இருக்காரே என இறங்கியோ உருகியோ தகவலை நமக்குத் தராது, கேட்டால்தான் தரும். நமக்கான பொருள் தேவைகளை நம் பெற்றோரிடம் கேட்டு வாங்கத் தெரிந்த நமக்கு, நமது அறிவுக்கான மற்றும் வாழ்க்கைக்கான தேடலை/ கேள்வியை முறையானவர்களிடம் இருந்து கேட்டுப் பெற தெரிந்துதிருக்க வேண்டும். அதே நேரத்தில் தேடலையும்/கேள்வியையும் யாரிடம் கேட்டால் தெளிவு பெறுமோ அவர்களிடம் இறைஞ்சி கேட்டும் மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். கேள்வியும், தேடலும், தொடர் முயற்சியும் தான் நம்மை முழு மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டது. நம்மில் பலர் எதையும் துவக்கும் போது மிகுந்த ஆர்வத்தோடு தொடங்கி அதை எப்படி முழுமை பெற வைப்பது எனும் வழி தெரியாது இடையிலேயே அம் முயற்சியை கைவிட்டு தன்னைத்தானே நொந்துகொள்ளும் நிலை இருந்திருக்கும். இதையெல்லாம் சரிசெய்ய வழியே இல்லையா? இருக்கு. அப்படியா இந்த வலி போக்க என்ன வழி, என்ன மருந்து? வேறொன்றும் இல்லை அதற்கான மருந்து மற்றும் வழி நம்முள்ளே உண்டு. சலிப்பில்லாத் தேடல், உயர்வான குறிக்கோள் இவை இருந்தாலே போதும் உங்களுக்கான உயர்வு நிச்சயம்.

இவையெல்லாம் எனக்கு அளவுகடந்து இருக்கு, ஆனால் எனது திறமை எது என்பதை அடையாளம் காண முடியவில்லை. முதலில் குறிக்கோளும், விடாமுயற்சியும், சலிப்பில்லாத தொடர் பயணமும் இருக்கும்போது நம் திறன் நமக்கு அடையாளம் காட்டப்படும். முதலில் குறிக்கோள், திறன் (Talent/Skill) தேடல் என இருக்கும் போது எல்லாம் ஒரு நேர்கோட்டிற்கு வந்துவிடும். அப்படியா இன்றே இப்போதே நான் குறிக்கோளை ஏற்படுத்தி பயணிக்கப் போகிறேன் என அவசரப் படவேண்டாம். அதற்கு கொஞ்சம் திட்டமிடலும் இருக்க வேண்டும். திட்டமிடல் சரியாக இருக்கும் போது சில சறுக்கல்கள் வரும்போது நம்மை நாம் சரிசெய்யும் வாய்ப்பு அமையும். இல்லையெனில் தொய்வு வந்துவிடும். திட்டமிட்டு செயல்படும் செயலில் தான் முறையான அணுகுமுறை இருக்கும். அதுதான் நம்மை இன்னும் திடப்படுத்தி ஊக்கத்தைத் தரும்.

இந்த தொடர் ஊக்கமும், சலிப்பில்லா பயணமும் இருக்க என்ன செய்ய வேண்டும்? தீர்ந்து போகாத ஆர்வம், என்ன இது, தொடர்ந்து இது வேணும் அது வேணும்னு ஒரே கொக்கி போட்டு பேசுறீங்க எனத் தோணலாம். ஆம் எதுவும் நமக்கு எளிதில் கிடைத்து விடுவதில்லை. எல்லாம் ஒரு போராட்டத்தில், புரட்சியில், முயற்சியில் தொடர் தேடலில் தான் கிடைக்கும். எளிதில் கிடைத்து விட்டால் அதில் ஏதும் பிடிப்பு ஏற்படாது. உங்களது பெற்றோர் கொடுத்த பணத்தில் செலவு செய்வதற்கும், நீங்களே சம்பாதித்து செலவு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகளை அறியலாம். மொத்தத்தில் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் நீங்களே ஒன்றைத் தேடி அடையும் போது அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்படும். அதை அடைய இன்றே முற்படுங்கள்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும். | குறள் எண் : 616

ஒன்றை நாம் முழு மனதோடு தேடும் போது அது நிச்சயம் நம்மை வந்தடையும் இதை மெய்பிக்கும் வகையில் உலகப் புகழ் பெற்ற அறிவியல் மேதையின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வை உங்களுக்குக் கூறுகிறேன், அது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த வாரம் பேசுவோம்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  1. Muthulakshmi says:

    அருமை

  2. சுசீலா says:

    கேட்டால் தான் கிடைக்கும். ஆனால் சில நேரங்களில் யாரிடம் கேட்பது கடவுளிடமா? என்ற கேள்வி எழுகிறது. திறமைக்கான அங்கீகாரம் மேடை அல்லது வாய்ப்பு கிடைக்காத நிலையில் அலுப்பு தட்டும். அது தொய்வு ஏற்படும். இன்னும் எழுதுங்கள்

  3. ஜேம்ஸ் விக்டர் says:

    உங்களது தொடர்முயற்சிக்கு வாழ்த்துக்கள் அன்பு சகோதரர்.