எச்சரிக்கை.. சட்டப்படி தத்து எடுங்கள்…இல்லையெனில் குழந்தை உங்களிடம் இருந்து பிரிக்கப்படலாம்….
வெங்கட்ராம்.
பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களால் குழந்தைகளை தத்தெடுக்கும் ஆர்வம் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஆனால் அதனை சட்டப்படி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக இன்னும் சென்றடையவில்லை. இதற்கு உதாரணமாக மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் 25 வயது பெண்ணும் ஒரு இளைஞனும் ஒன்றாக பழகி உள்ளனர். இதன் காரணமாக அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் அந்த இளைஞன் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய அப்போது மறுத்துவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை ஒரு சிலர் அணுகி அந்த குழந்தையை தத்து கொடுக்குமாறு அறிவுரை வழங்கினார். அந்தப் பெண்ணும் அந்த குழந்தையை தத்து கொடுத்து விட்டார். சில நாட்கள் கழித்து அந்த இளைஞனையே அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டார். இப்போது அந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் அந்தப் பெண் இறங்கினார். ஆனால் அந்த குழந்தையை தத்தெடுத்த பெற்றோர்கள் அந்த குழந்தையை மீண்டும் அந்தப் பெண்ணிடம் கொடுக்க மறுத்துவிட்டனர். அந்தப் பெண் இறுதியில் கோர்ட் வாசலை நாடி உள்ளார். வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்டு நீதிபதி அந்த குழந்தையை தத்தெடுத்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பெற்றோருக்கு உத்தரவிட்டனர். ஆனால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இல்லாததால் அதனை தள்ளுபடி செய்து அந்த குழந்தையை மீண்டும் அந்தப் பெண்ணிடமே ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். குழந்தையை வளர்க்கும் உரிமை சட்டப்படி அந்த குழந்தையை பெற்றவளுக்கு என்று கூறி இந்த உத்தரவை வழங்கினார்கள். இதன் மூலமாக நாம் அறிய வேண்டிய செய்தி என்னவென்றால் எதைச் செய்தாலும் சட்டப்படி செய்வது பாதுகாப்பு.