அம்மா உணவகம் போறீங்களா…அப்போ இந்த ஃபார்ம ஃபில்லப் பண்ணுங்க…
வெங்கட்ராம்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திட்டங்களில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அம்மா உணவகம் திட்டமும் ஒன்று. ஏழைகளும் நடுத்தர வருடத்தினரும் பணம் சம்பாதிக்க அடைந்து கொண்டிருக்கும்போது குறைந்த விலையில் தரமாக அவர்களின் பசியை ஆற்றிய திட்டங்களில் அம்மா உணவகம் பெரிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட இந்த திட்டம் திமுக ஆட்சி வந்த பின்பு அம்மா உணவகம் மூடப்பட போகிறது என்று பல்வேறு வதந்திகள் கிளம்பின. இது மிகவும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் அறவே இல்லை என்று திமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. ஆனால் சமீப காலமாக அம்மா உணவகத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுகிறதே தவிர லாபம் எதுவும் வரவில்லை. சில அம்மா உணவகங்களில் தினமும் 100 ரூபாய்க்கும் 180 ரூபாய்க்கும் மட்டுமே விற்பனை ஆகிறது. இது நிர்வாகம் அளவில் பார்க்கும்போது பெருத்த நஷ்டம் ஆகும். இதனை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தில் அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் மக்களிடம் கருத்து கேட்கும் படிவம் சமர்ப்பிக்கப்படுகிறது. அந்தப் படிவத்தில் வரும் விவரங்களை வைத்து அம்மா உணவகத்தை எவ்வாறு பயன் அளிக்கும்படி மேம்படுத்தலாம் என்று திட்டம் தீட்டப்படும். இதன் மூலம் உணவு வீணாவதையும் அம்மா உணவகங்கள் லாபகரமாக இயங்கவும் செலவுகளை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.