ஏப்.5ல் பாராளுமன்ற முற்றுகைப் போரட்டம்… தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவிப்பு
மோடி அரசு கடைபிடித்து வரக்கூடிய கொள்கைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவே உள்ளது -தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் சண்முகம் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் மாநில பொருளாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சண்முகம் கூறுகையில் : ஏப்.5-ம் தேதி புதுடெல்லியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்கக் கூடிய பாராளுமன்ற முற்றுகைப் போரட்டம் நடத்துவது என்று அகில இந்திய அமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டு, அதற்கான பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9 ஆண்டு காலமாக மோடி அரசு கடைபிடித்து வரக்கூடிய கொள்கைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவே உள்ளது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
முழுவதும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான ஒரு அணுகுமுறையையுமகொள்கையையும் தான் மோடி அரசு கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. சாதாரண ஏழை, எளிய மக்கள் கடும் வரி விதிப்புக்கு உள்ளாவதும், பெரிய முதலாளிகள் மற்றும் பெரும் கார்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கத்தின் நிதி மூலதனத்தை வாரி வழங்குவது என்கிற ஒரு போக்கை மோடி அரசு கடைபிடிக்கிறது.
எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்ற முறையில், 200-க்கும் மேற்பட்ட நடைபயண குழுக்கள் மூலம் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியா கத்தான் ஏப்.5-ம் தேதி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற விருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை பணி, சிப்காட் போன்ற பல்வேறு பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் வளர்ச்சி பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
அதற்கு நேர் எதிர்மாறாக காவல் துறை மற்றும் வருவாய் துறை மூலம் நிலத்தை கையகப்படுத்துகிற ஒரு அடாவடித் தனமான நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உண்மையான சந்தை விலைக்கு ஏற்றவாறு மாநில அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.