சாலை வசதி கேட்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறிய கிராம மக்களால் பரபரப்பு…!
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கிராமத்திற்கு பாதை வசதி கேட்டு நள்ளிரவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறிய கிராம மக்களால் பரபரப்பு. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், சூரப்பள்ளி ஊராட்சியில் உள்ளது சேவியூர் காட்டுவளவு என்ற கிராமம். இங்கு சுமார் 30 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த மக்கள் மெயின் ரோட்டிற்கு வருவதற்கு தனியார் பட்டா நிலத்தில் புகுந்து சென்று வந்து கொண்டிருந்தனர். அவ்வப்போது நில உரிமையாளர் பாதையை தடுப்பதால் தங்களுக்கு நிரந்தர பாதை வசதி வேண்டுமென்று வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை பலமுறை மனு அளித்து பார்த்தனர். ஆனாலும் அவர்களுக்கு பாதை மட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு ஊர் திரும்பினர்.
அப்போது தாங்கள் சென்று வந்த ஒற்றையடிப் பாதையும் மண் தோண்டப்பட்டு பெரிய பள்ளமாக காணப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், இன்று மாலை சூரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறினார்கள். குழந்தைகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தவர்கள் , அங்கே சமைத்து சாப்பிட்டுவிட்டு உறங்கத் தொடங்கினார்கள். வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்ததால் நள்ளிரவையும் தாண்டி போராட்டம் நீடித்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் அப்போது தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.