விபச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர், அதிரடி நீக்கம்! கொதித்த எடப்பாடி பழனிச்சாமி-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக நகர அவைத்தலைவரும், பரமக்குடி நகராட்சி கவுன்சிலருமான சிகாமணியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

15 வயது பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தில் கைதான அதிமுக கவுன்சிலர் சிகாமணியை கட்சியில் இருந்து நிக்கி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்த பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலர் சிகாமணி (44) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி மாணவி படிப்பதற்காக உதவி கோரிய நிலையில், சிகாமணியும், அவரது நண்பரான ராஜா முகமதுவும் (36) சேர்ந்து அந்த மாணவியை காரில் ஏற்றிச் சென்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை அதிமுக கவுன்சிலர் சிகாமணி, ராஜா முகமது மற்றும் மறத்தமிழர் சேனை அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடியைச் சேர்ந்த கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும், கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர் விசாரணையில் மேலும் சில முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதான பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜி. சிகாமணி, (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *