இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்வு.. முதல்வரை கொண்டாடிய விசைத்தறியாளர்கள்

தமிழ்நாட்டில் விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரத்தை  750 யூனிட்.டில் இருந்து  ஆயிரம் யூனிட்டாக உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. 

தமிழகத்தில் இயங்கி வரும்  6 லட்சம் விசைத்தறிகளை  நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்..  விசைத்தறிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் போது 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதன்படி மார்ச் முதல் தேதியில் இருந்து ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவதாக  முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார்..

 அதே போல் கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைத்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.் இதன்படி யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 70 பைசாவாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் 70 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். 

ஈரோட்டில் கேக் வெட்டி விசைத்தறியாளர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். பின்னர் பேட்டியளித்த கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் கூடுதலாக 20,000 மின் இணைப்பு பெற்ற விசைத்தறியாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவித்தார்.  மேலும் மின் கட்டண குறைப்பு மற்றும் இலவச மின்சார உயர்வு ஆகியவற்றால் விசைத்தறி தொழில் நலிவில் இருந்து மேம்படும் என்றும் கூறினார். 

தங்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை குறைத்ததற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததைப் போல் இலவச மின்சாரத்தை உயர்த்தி வழங்குவதற்காகவும் தமிழக முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் விசைத்தறியாளர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *