மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 6ஆக அதிகரிக்க திட்டம்.
சென்னை மெட்ரோ ரயில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் 2.5 லட்சம் பயணிகள் பயணிக்கும் நிலையில், உச்ச நேரங்களில் விடுமுறை நாட்களில் மெட்ரோவில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-1 இயக்கப்படும் ரயில்களின், குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று பொது பெட்டிகளும், ஒரு மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அதோடு இரண்டு பெட்டிகளை இணைத்து ஆறு பெட்டிகளாக ஒரு ரயிலில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் அதிக அளவிலான பயணிகளை ஒரே ரயிலில் ஏற்ற முடியும் என தெரிவிக்கப்படுகிறது. மெட்ரோ ரயிலில் இரண்டு பெட்டிகளை இணைக்கும் போது மெட்ரோ ரயிலின் நீளம் மாற்றம் அடைவதால் மொத்த மெட்ரோ மென்பொருள் அமைப்பிலும் மிகப்பெரிய மாற்றம் செய்ய வேண்டிய பணி இருப்பதாகவும், இதனால் பணிகள் முடிவடைந்து விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள் நடைமுறைக்கு வர 1.5 முதல் 2 வருடங்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.