திருச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷம் கலப்பா?
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சியில் செட்டியபட்டி உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அப்பகுதியில் உள்ள மினி சின்டெக்ஸ் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில் மர்ம நபர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விசம் கலந்துள்ளதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. இதனால் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று குடிநீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்குப் பின்னரே குடிநீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதா என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாளாகவும் குடிநீரை சுகாதாரத்துறையினர் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்.