அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பச்சை கொடி காட்டிய நீதிமன்றம்…!
தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தம் செய்ய அனுமதி அளித்ததை தொடர்ந்து ஐந்தாவது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம்; நீதிமன்றம் நிபந்தனையை தொடர்ந்து ஆலையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் தங்களது போராட்டத்தை தொடர முடிவு.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் என்டிபிஎல் தமிழ்நாடு பவர் லிமிடெட் இந்த நிறுவனம் சார்பில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 1100 பேர் ஒப்பந்த ஊழியர்களாக கடந்த பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி முதல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை என் டி பி எல் நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்எல்சியில் வழங்குவது போன்று சமமான ஊதியம் வழங்க வேண்டும் ஈஎஸ்ஐ, பிஎஃப், பிடித்தம் செய்ய வேண்டும் தொழிலாளர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் என் டி பி எல் நிர்வாகம் சார்பில் நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வேலை நிறுத்தத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.
மேலும் நேற்று ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் உடன் மதுரையில் மண்டல தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் மத்திய தொழிலாளர் துணை தலைமை ஆணையர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து ஐந்தாவது நாளாக என் டி பி எல் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தொலைவில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடலாம் என உத்தரவிட்டதை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டக் களத்தை வேறு பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சுமார் 520 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது மேலும் கட்டுமான பணிக்காக என் டி பி எல்க்கு வந்த வட மாநில தொழிலாளர்களை வைத்து பாதுகாப்பு இன்றி ஆலையை தொடர்ந்து இயக்கி வருவதாக ஒப்பந்த ஊழியர்கள் குற்றச்சாட்டினர்.