மதுபோதையில் நிர்வாணமாக பெண்களிடம் சேட்டை செய்த நபரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது…!
தேனி அருகே மதுபோதையில் நிர்வாணமாக சென்று பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட டிராக்டர் ஓட்டுநர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார்.
தேனி மாவட்டம் வீரபாண்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சோலைத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (40). திருமணமாகி 3பிள்ளைகள் உள்ள நிலையில், இவர் டிராக்டரில் தொழு உரமான, மாட்டு சாணத்தை எடுத்து விளை நிலங்களுக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். இதில் அவருடன் வேலை செய்த அதே பகுதியில் வசித்து வரும் பட்டியலினத்தை சேர்ந்த அழகர் என்பவருடன் சங்கருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை மது போதையில் இருந்த சங்கர், தன்னிலை மறந்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக சாலையில் இங்கும் அங்குமாக நடந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் சோலைத்தேவன் பட்டி வடக்குத் தெரு காலணியில் உள்ள அழகர் வீட்டருகே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அழகரின் மனைவி மற்றும் அவருடைய உறவினரான ஜெகதீஸ்வரி என்ற இளம்பெண் தட்டிக்கேட்டதால் அவர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி திட்டியதோடு கையால் தாக்கியுள்ளார்.
இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் நிர்வாணமாக இருந்த சங்கரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரபாண்டி போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து விசாரணைக்காக சங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இது தொடர்பாக ஜெகதீஸ்வரி அளித்த புகாரில், பெண்கள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சங்கர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மது போதையில் நிர்வாணமாக சென்று தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.