HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 43

பணியாளரின் ஈடுபாடும் பணித்திறனும்

ஒரு குடும்பத்தின் தலைசிறந்த சொத்து மக்கள் செல்வம் தான். ஒரு நாட்டின் மிகப்பெரிய சொத்து அதன் மக்கள் வளம் தான், அவர்களை வைத்து தான் நாட்டின் வளர்ச்சி, உயர்வு மற்றும் அத்தனைத் திட்டங்களும் கணக்கிடப்படும். அதேபோலத் தான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, உயர்வு மற்றும் பெருமை என்பது அதன் பணியாளர்கள் தான், தொழில்நுட்பம் மற்றும் இன்னபிற காரணிகள் எல்லாம் பிறகு தான். அப்படிப்பட்ட பணியாளர்களை சிறந்த முறையில் வேலையில் ஈடுபாடு காட்டவைப்பது என்பது ஒரு சவாலான விசயம் என சிலர் நினைப்பதுண்டு, அதைத்தாண்டி இவை சாதிக்கக்கூடிய விசயம்தான் என்பதை பலர் செயல்படுத்தி காட்டியுள்ளனர். இச்செயல்பாட்டை நிறுவனங்களில் Employee Engagement என அழைப்பதுண்டு அதாவது பணியில் பணியாளரின் ஈடுபாடு என பொருள்கொள்ளலாம். இந்தச் செயல்முறையை முதன் முதலில் அமெரிக்காவில் உள்ள பாஷ்டன் பல்கலை கழகத்தின் பேராசிரியர் William A. Kahn என்பவர் உருவாக்கினர், பின்னாளில் அது பல்வேறு மாற்றங்களைப் பெற்று நிறுவனங்களில் தவிர்க்கமுடியா ஒரு நிலையில் உள்ளது.

பணியாளர் ஈடுபாடு என்பது, வெறுமனே பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் ஒரு சில விழாக்களை கொண்டாடுவது மட்டுமல்ல இதெல்லாம் அதில் ஒரு சிறு அங்கம்தான். அதைத்தாண்டி வேறுபல சிறப்பு நிலைகள் உள்ளது. பேரா.வில்லியம் மூன்று கூறுகளை வரிசைப்படுத்தி, இதன் அடிப்படையில்தான் ஒரு பணியாளர் நிறுவனத்தோடு ஒன்றிணைக்க முடியும் என்பதை விளக்குகிறார்.

Pro. William Kahn

  • Physical Engagement உடல் மற்றும் மனதளவிலான ஈடுபாடு: ஒரு வேலையில் பணியாளர் எவ்வளவு மனதளவில் ஒன்றி வேலை செய்கிறார் என்பதைப் பொறுத்து அவரது ஈடுபாடு அறியப்படும். இப்படிப்பட்டவர் பெரும்பாலும் வம்புதும்புகளை உருவாக்கவோ அல்லது ஈடுபடவோ மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் கருத்தாக இருப்பவர்.

  • Cognitive Engagement – அறிவுசார்ந்த ஈடுபாடு: நிறுவனத்தின் செயல் திட்டங்களை உள்வாங்கி அதை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றி வளர்ச்சியைக் கூட்டலாம் என தனது அறிவார்ந்த பங்களிப்பைத் தரக்கூடியவர். படைப்பாற்றல் உள்ளவராகவும் நிறுவனத்தின் மற்றும் அதன் தலைவரின் குறிப்பறிந்து செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் ஆற்றல் பெற்றவராகவும் இருப்பர். இப்படிப்பட்ட ஈடுபாடு கொண்டவர்களால் ஒரு நம்பகமான முடிவினை நிறுவன நலனுக்காக துணிந்து எடுக்க முடியும். தானும் வளர்ந்து நிறுவனத்தையும் வளர வைக்கும் ஆற்றல் கொண்டவர்.

  • Emotional Engagement – உணர்வுப்பூர்வமான ஈடுபாடு: இந்த நிறுவனத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், ஏனென்றால் எனக்கு எது வந்தாலும் எங்க முதலாளி பாத்துக்குவார். எங்க முதலாளி அவர் தங்க முதலாளி என பாட்டுப் பாடாத குறையாக, நிறுவனத்தின் தலைவரோடு ஒரு உணர்வுப்பூர்வமான ஈடுபாடு கொண்டவராக இருப்பர். தன் எண்ணத்தால், செயலால் எப்போதும் நிவனத்தின் மீது கட்டற்ற பாசப் பிணைப்பு கொண்ட இவர்களை அவ்வளவு எளிதில் நிறுவனம் விட்டு விடாது. தொட்டுத் தொடரும் ஒரு உறவாக தொடர்ந்து இருப்பர். இதில் அன்பும், உரிமையும் நிறைந்திருப்பதை நாம் பார்க்க முடியும்.

பணியாளர் ஈடுபாடு என்பது மேற்கண்ட மூன்று நிலைகளில் எதாவது ஒன்றையாவது பெற்றிருந்தால் போதும் அவர்களுக்கும் நிறுவனத்துக்கும் ஒரு பிணைப்பு இருக்கும் இல்லாத பட்சத்தில் வெறுப்பு மட்டுமே மிஞ்சும். இதற்கும் மனிதவளத் துறைக்கும் என்னத் தொடர்பு எனக் கேட்கலாம். இல்லாமலா இருக்கும். இந்த மூன்றில் எதாவது ஒரு பிணைப்பை ஏற்படுத்த நிறுவனத்தின் துணைகொண்டு அதை செயல்படுத்துவது மனிதவளத்துறையின் பொறுப்பு. இதையெல்லாம் செய்வது நிறுவனத்துக்கு வருமானத்தைக் கூட்டத்தானே எனும் நகைப்பான கேள்வி வரலாம். அப்படிப் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. நாம் நமது அதிகமான நேரத்தை குடும்பத்தைவிட வேலைபார்க்கும் இடத்தில்தான் செலவிடுகிறோம், அப்படி இருக்கும் போது, அங்கு நமது மனது ஒருநிலையில் இல்லாது அலைபாய்ந்தால் இருபக்கமும் நட்டம்தான். ஆதலால் இது இருபக்கமும் பலன் தரும் செயல் என்று பார்ப்பதுதான் நல்லது.

மேற்சொன்ன மூன்று காரணிகள் நிறுவனத்துக்கு உண்டான அணுகுமுறையாக இருந்தாலும், பணியாளர் ஒரு நிறுவனத்தோடு ஒன்றிக்க மற்றும் முழு ஈடுபாடு காட்ட அவர்களது மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மூன்று முத்தான காரணிகள் உள்ளது, அவை சரிசெய்யப்படும் போதுதான். இந்த இருபக்க நலனும் சரியாக இருக்கும். எவ்வித அடிப்படை வசதிகளும் கொடுக்காமல் எதிர்பார்ப்பை மட்டுமே புகுத்தி எக்கச்சக்க பலனை எதிர்பார்த்திருப்பது வீண்தான்.

நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நிறுவனத்தின் தவிர்க்க இயலா ஒருவராக பார்ப்பது நிறுவனத்தின் பொறுப்பு, அந்த தவிர்க்க இயலா ஒருவராக மாற தொடர்ந்து முயற்சித்து செயலாக்குவது பணியாளரின் பொறுப்பு.

அதென்ன அந்த முத்தான மூன்று காரணிகள், அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *